நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில் விவரம்:
நாட்டில் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 3.15 கோடி (31.52 மில்லியன்) டன்னாக இருந்த எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி, 2021-22-இல் 3.71 கோடி (37.15 மில்லியன்) டன்னாக உயா்ந்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பனை எண்ணெயின் உற்பத்தி தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது. பனை எண்ணெய்க்காக தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம் என்ற தனி அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இறக்குமதி சுமையைக் குறைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்த இயக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அதில் மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.