புது தில்லி: தில்லி - மாஸ்கோ இடையே வாரத்தில் இரண்டு முறை இயக்கப்படும் விமான சேவையை ரத்து செய்துள்ளது ஏர் இந்தியா.
உக்ரைன் மீது ரஷியா போர்தொடுத்திருக்கும் நிலையில், ரஷியாவுக்குச் செல்லும் விமானங்களின் காப்பீட்டுக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால், தில்லி - மாஸ்கோ இடையே இன்று இயக்கப்பட வேண்டிய விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருக்கும் நிலையிலும், ரஷிய வான்வளியைப் பயன்படுத்த ஏர் இந்திய விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களும் சர்வதேச முகமை மூலம் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷிய தூதரகம் புதன்கிழமை தெரிவித்திருக்கும் தகவலில், டாடா குழுமம் நிர்வகித்து வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம், தில்லி - மாஸ்கோ - தில்லி இடையேயான விமான சேவைக்கான டிக்கெட்டு விற்பனையை நிறுத்தியிருப்பதாகவும், இது குறித்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருப்பதாவது, ரத்து செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணத் தொகையும் திரும்ப அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.