புதுதில்லி: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தனது தில்லி பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உயர்மட்ட தலைவர்களை சந்தித்து தனது எட்டு மாத கால அரசாங்கத்தின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க இரண்டு நாள் பயணமாக பொம்மை தில்லி சென்றார்.
மத்திய நீர்வளம், எரிசக்தி, சுற்றுச்சூழல், நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை சந்தித்தார். இந்த முறை தனது தில்லி பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும், மேலும் அவர்களிடமிருந்து தனக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது என்று பொம்மை தில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், பாஜகவின் நிறுவன தின விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
"பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சிக்கும் எனக்கும் அறிவுறுத்தியுள்ளார்," என்றார்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சுருக்கமாக நடைபெற்ற விவாதம் குறித்தும் பொம்மை தெரிவித்தார். பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும்போது பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிப்பதாக நட்டா கூறினார்.
ஜே.பி.நட்டா கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) ஆகியோரைக் கலந்தாலோசித்த பிறகு இறுதி முடிவை எடுப்பார் என்று பொம்மை மேலும் கூறினார்.
பட்ஜெட் திட்டங்களை செயல்படுத்துவதே தனது முன்னுரிமை என்று அறிவித்த கர்நாடக முதல்வர், "நான் பெங்களூரு திரும்பியதும் திட்டங்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்படும். திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்தப்படும்" என்றார் பசவராஜ் பொம்மை.