உக்ரைனில் போரைத் தொடுக்கச் சொன்ன ரஷிய அதிபர் புதினின் மகள்கள் மீது பிரிட்டன் புதிய தடைகளை விதித்துள்ளது.
உக்ரைன் மீது 43 ஆவது நாளாக தாக்குதல் நடந்து வரும் ரஷியப் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் விளாதிமீர் புதினின் இரு மகள்கள் மீது முதல்முறையாக தனிப்பட்ட புதிய தடைகளை பிரிட்டன் விதித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா தரப்பில் ரஷிய அதிபர் புதினின் மகள்களான மரியா புதின், கேத்தரீனா டிக்கோனோவாவை குறி வைத்து பல்வேறு தடைகளை விதித்ததுடன் இருவரும் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்
அமெரிக்காவில் அவர்களுக்கு சொத்துகள் இருந்தாலும், இனி பயன்படுத்த முடியாது. அவர்கள் இருவரும் ரஷிய வங்கிகள் உள்ளிட்ட அமெரிக்க நிதி அமைப்பில் எந்த பரிமாற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதினின் மகள்களைத் தவிர, ரஷிய பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி, குழந்தைகள், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவின் தடை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தற்போது புதின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மகள்கள் பிரிட்டனில் சொத்துகள் வாங்கவோ பயணப்படவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ரஷியாவின் ஸ்பெர் வங்கி, ஆல்பா வங்கிகள் அமெரிக்க நிதி அமைப்பை தொடர்புகொள்ள முடியாது. இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது.
டிக்கோனோவா ரஷிய ஸ்டேட் யுனிவர்சிட்டியில் அறிவியல் மையத்தின் இயக்குநராகவும், கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் உள்ளார். அவர் ரோசியா வங்கியின் இணை உரிமையாளரின் மகனான எரிவாயு நிறுவன நிர்வாகி கிரில் ஷமலோவை மணந்துள்ளார்.