ராஜஸ்தான் மாநிலத்தில் வியாழக்கிழமையன்று பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 105 டிகிரி முதல் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது.
வட இந்திய மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரம் முதலே வெப்பஅலை வீசி வருகிறது. அதன் தாக்கம் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் அனல் தகிக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலேயே வெயில் பல இடங்களில் 110 டிகிரியை நெருங்க ஆரம்பித்துவிட்டது குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்பஅலை கடுமையாக இருக்கும் என்று ஒரு சில பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கையும் கடுமையான வெப்ப அலை இருக்கும் ஒரு சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நேற்று அதிகபட்சமாக ஜாலோர் பகுதியில் 113 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், பார்மர் பகுதியில் 112.82 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியிருந்தது.
சென்னையில் தகிக்கும் வெயிலையே தாங்க முடியாமல் சென்னை வாழ் மக்கள் பகல் 12 மணிக்கு மேல் தலைமறைவாகிவிடும் நிலையில், ராஜஸ்தான் மக்களின் நிலையை நினைத்தால் கவலைதருவதாகவே உள்ளது.