சசராம்: பிகார் மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் அர-சோனே கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த 60 அடி நீள இரும்புப் பாலம் காணாமல்போயிருக்கிறது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்திருக்கும் ஒரு படத்தில், கிணற்றைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுப்பார். அது போல, அப்பகுதி மக்கள் பாலத்தைக் காணவில்லை என்று புகாரளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாலம் காணாமல் போன அமியாவார் கிராமத்தைப் பற்றித்தான் தற்போது அக்கம் பக்கத்தினர் பேசி கிண்டலும் கேளியும் செய்து வருகிறார்கள். சிமெண்டால் ஆன பாலம் கட்டப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த இந்த இரும்பு பாலம் இப்படி ஒரே நாளில் களவு போகும் என்று அப்பகுதி மக்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
திருடர்கள், புல்டோஸர் மற்றும் பேட்டரி விளக்குகள் உள்ளிட்டவை எடுத்து வந்து மிக சாமர்தியமாக ஒரு பாலத்தையே அகற்றி வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதி நீர்வளத் துறை துணை பொறியாளர் புகாரளித்துள்ளார்.