உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் இன்னும் தீண்டாமை இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிதாரி கே. ராஜு எழுதிய கட்டுரைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
"அரசியல்வாதிகள் சிலர் எப்போதும் அதிகாரத்தைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். நான் அதிகாரத்துக்கு மத்தியில் பிறந்தவன். ஆனால், அது ஒருபோதும் எனக்கு விருப்பத்தை உண்டாக்கியதே இல்லை. மாறாக, மக்களையும் நாட்டையும் புரிந்துகொள்ள நான் முயற்சிக்கிறேன். இந்த நடைமுறையில், உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் இன்னும் தீண்டாமை இருப்பதை நான் தெரிந்துகொண்டேன். இந்தப் பிற்போக்கான மனநிலையை நாம் உடைக்க வேண்டும்.
இந்த நாடு என் மீது அளவற்ற அன்பை வெளிப்படுத்தியுள்ளது. அதற்கு நான் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன். நிச்சயமாக விமர்சனங்களை சம்பாதித்த காலங்களும் உண்டு. அது மிகுந்த வேதனையளித்தாலும், ஆழ்மனதில் என் நாடு எனக்குப் பாடம் கற்பிக்க விரும்புகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பேன்.
வேறு ஒரு சாதி அல்லது மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அப்பாவி மக்களை மிருகங்கள்போல் தாக்குவதைப் பார்த்திருக்கிறேன். இந்த நாட்டில் இது தலித்துகளுக்கு மட்டுமே நடக்கிறது" என்றார் ராகுல்.
கே. ராஜு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் அனைத்து இந்திய சிறுபான்மையினர் துறைகளின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.