சத்தீஸ்கரில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கனவுத் திட்டமான ராமர் வனவாச பாதை சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் ஆளும் மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்தத் திட்டத்தின் அங்கமாக ராம நவமி தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுப்பிக்கப்பட்ட ஷிவ்ரி நாராயண் கோயில் பிரமாண்ட திறப்பு விழாவை முதல்வர் பூபேஷ் பாகெல் தொடக்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ள 9 தலங்களில் இது இரண்டாவது தலம். கடந்தாண்டு அக்டோபர் மாதம் பழமைமிக்க மாதா கௌசல்யா கோயில் புனரமைக்கப்பட்டது.
இதுபற்றி பூபேஷ் பாகெல் கூறியதாவது:
"ஷிவ்ரி நாராயண் கோயிலை அயோத்தியைப் போலவே மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். ராமாயணத்தில் சத்தீஸ்கருக்குப் புகழ்பெற்ற வரலாறு உள்ளது. ராமர் வனவாச பாதை திட்டத்தின்கீழ் 9 இடங்களை மேம்படுத்துகிறோம். மாதா கௌசல்யா கோயில் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது."
இதையும் படிக்க | 33 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் மஹோத்ஸவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், ஷிவ்ரிநாராயண் கோயிலில் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.
இதனிடையே, மதவாத அரசியலில் பாஜக ஆதாயம் அடையாமல் இருப்பதற்கு காங்கிரஸ் வெளிப்படையான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக ராமர் வனவாச பாதையிலுள்ள 9 முக்கிய இடங்களை மேம்படுத்தி புனரமைக்கும் திட்டத்தை அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்த பூபேஷ் பாகெல் அரசு முயற்சித்து வருகிறது.
ராமர் வனவாச பாதைத் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் அங்கமாக ஷிவ்ரிநாராயண் கோயில் வளாகத்தில் ராமாயணம் கச்சேரியையும் மாநில அரசு நடத்தி வருகிறது. மாநிலத்தின் 25 மாவட்டங்களிலிருந்து பல்வேறு குழுக்களிலிருந்து வந்த புகழ்பெற்ற 350 கலைஞர்கள் 3 நாள்களாகப் போட்டியில் பங்கேற்று வருகின்றனர். வெற்றியாளர் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 5 லட்சம், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சத்தை முதல்வர் பூபேஷ் பாகெல் பரிசுத் தொகையாக வழங்கவுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.