நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று ராம நவமி கொண்டாட்டப்பட்டது. இதையொட்டி, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலத்தின்போது கலவரம் வெடித்தது.
ஊர்வலத்தின்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததையடுத்து, மத்தியப் பிரதேசம் கர்கோனின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தீவைப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் முஜல்டே கூறுகையில் "ஒலிபெருக்கியில் இசையை இசைப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தலாப் சவுக் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது மோதலாக வெடித்தது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டியிருந்தது" என்றார்.
குஜராத்தில் கம்பாத் மற்றும் ஹிம்மத்நகரில் கலவரம் காரணமாக வன்முறை சம்பவங்கள் வெடித்தன. இரண்டு பகுதிகளிலும் கல் வீச்சு சம்பவங்களும் தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்ததாக காவல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குஜராத் கம்பாத் பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மோடி- பைடன் இன்று பேச்சு...
மேற்கு வங்கம் ஹவுராவில், ஷிப்பூர் பகுதியில் ராம நவமி ஊர்வலத்தின் போது மோதல்கள் ஏற்பட்டதாகக் கிடைத்த புகாரையடுத்து, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேுபோல, ஜார்கண்ட் லோஹர்டகாவிலும் கல் வீச்சு சம்பவங்களும் தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்ததாகவும் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.