காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது:
"காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டியிட விரும்புவோர் தாராளமாக வேட்புமனு தாக்கல் செய்யலாம். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
தேர்தல்கள் வரும், போகும். அதற்கெல்லாம் மனமுடைந்துவிடக் கூடாது. நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்" என்றார் அவர்.
இதையும் படிக்க | பள்ளிகளுக்கு ஏப். 16ஆம் தேதியும் விடுமுறை
2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் வரை சோனியா காந்தியே கட்சியை வழிநடத்த வேண்டும் என கடந்த மாதம் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில்கூட முடிவு செய்யப்பட்டது.
கட்சியின் நலனுக்காகத் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக சோனியா காந்தியும் குறிப்பிட்டுள்ளார்.