ஆந்திரத்தில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது ரயில் மோதியதில் 5 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பத்துவா(Batuwa) அருகே திங்கள்கிழமை இரவு குவாஹாட்டி விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றது. இதையடுத்து ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் சில பயணிகள் இறங்கி அதையொட்டியுள்ள மற்றொரு தண்டவாளப் பாதையில் நின்றுள்ளனர்.
அப்போது அந்த பாதையில் வந்த கோனார்க் விரைவு ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீகாகுளம் எஸ்.பி. கூறுகையில், 'குவாஹாட்டி விரைவு வண்டியில் யாரோ ஒருவர் சங்கிலியை இழுத்ததால் ரயில் நின்றது. ஐந்து பேர் இறங்கி தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கோனார்க் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்' என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.