தெலங்கானா: அம்பேத்கருக்கு 125 அடியில் வெண்கலச் சிலை
தெலங்கானாவில் அம்பேத்கருக்கு 125 அடியில் நிறுவப்படும் வெண்கலச் சிலையின் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடைய இருப்பதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள உசைன் சாகர் ஏரிக்கு அருகில் ரூ.150 கோடி செலவில் உலகிலேயே பெரிய அம்பேத்கர் சிலையை நிறுவ தொடங்கப்பட்ட பணிகள் விரைவில் முடிய உள்ளதாக அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
125 அடியில் உருவாகும் இந்த வெண்கலச் சிலை இந்தாண்டு இறுதிக்குள் நிறுவப்படும் எனவும் சிலை பகுதியிலேயே அருங்காட்சியகம் மூலம் அம்பேத்கரின் பணிகள் மற்றும் வாழ்க்கையை அறியும்படியாக புகைப்பட தொகுப்புகள் மற்றும் நூலகமும் அமைய இருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர் ராமா ராவ் ‘5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்து இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது . இந்தாண்டு இறுதிக்குள் சிலை திறக்கப்படும்’ என்றார்.
அம்பேத்கரின் இந்த வெண்கலச் சிலை 125 அடி உயரத்தில் 45 அடி அகலத்தில் உருவாக்கப்படுவதோடு 9 டன் வெண்கலப் பூச்சு மற்றும் துருப்பிடிக்காத 155 டன் இரும்பு கொண்டு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.