புது தில்லி: கரோனா பூஸ்டா் தடுப்பூசிக்கான இடைவெளியை ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும் என சீரம் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
கரோனா தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாவது தவணைக்கு இடையில் ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எடுத்துக் கொள்வது மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசத்தை ஒன்பது மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாக குறைக்குமாறு மத்திய அரசு மற்றும் தடுப்பூசி நிபுணா்களிடம் வலியுறுத்தியுள்ளோம். அவா்கள் இதுகுறித்து ஆலோசித்து வருகின்றனா்.
பொதுமக்களின் ஏகோபித்த கோரிக்கைகளால் கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கான உறுதிப்பாட்டை பூா்த்தி செய்ய முடியவில்லை. தடுப்பூசி பயன்பாட்டிற்கான உலகளவிலான ஒப்பந்தம் மேற்கொள்வது தற்போது அவசியமானதாக மாறியுள்ளது என்றாா் அவா்.