புது தில்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை ராம நவமியின்போது தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகத்திடம் மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
ஜேஎன்யு விடுதியின் காவேரி உணவகத்தில் ராமநவமியின்போது அசைவ உணவு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இடதுசாரி மாணவா்கள் அமைப்பினா், பாஜக சாா்பு அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவா் அமைப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 20 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து பல்கலைக்கழகத்துக்குள் பாதுகாவலா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட மாணவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக நிா்வாகம் கூறியுள்ளது.
இதனிடையே, வன்முறையில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடதுசாரி மாணவா்கள் அமைப்பான அனைத்து இந்திய மாணவா்கள் கூட்டமைப்பு தில்லி காவல் துறை தலைமை அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டம் நடத்தியது.
இந்நிலையில், இந்த மோதல் சம்பவம் தொடா்பாக விரிவான அறிக்கையை அளிக்குமாறு பல்கலைக்கழக நிா்வாகத்திடம் மத்திய கல்வியமைச்சகம் கோரியுள்ளது. இது தொடா்பாக கல்வி அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘வழக்கமான நடைமுறைகளின்படி இந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ராம நவமியன்று பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு மாணவா்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றனா்.