ஜஹாங்கீர்புரி வன்முறை வழக்கில் கைதான 14 பேர்களில் 12 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து தில்லி ரோகிணி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் உள்ள ஜஹாங்கீர்பூர் பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்து அமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இரு தரப்பிரனர் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி தாக்கிதாக்குதல் நடத்தியதால் அனுமன் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பின்னர் ஜஹாங்கீர்பூர் பகுதியிலுள்ள இருதரப்பினரிடையே அமைதி திரும்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கலவரத்தில் ஈடுபட்டு கற்களை வீசித் தாக்குதல் நடத்தியவர்களை ஒப்படைக்குமாறும் காவலர்கள் வலியுறுத்தினர். இதன் விளைவாக 8 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
இதையும் படிக்க- லக்கிம்பூர் விவகாரம்: ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீனா? -நாளை தீர்ப்பு
அதனைத் தொடர்ந்து இன்று மொத்தம் 14 பேரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது. காவல் துணை ஆய்வாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 21 வயது இளைஞரையும் காவலர்கள் கைது செய்தனர். மேலும் அந்த இளைஞரிடமிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே கைதான 14 பேரையும் தில்லி ரோகிணி நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது கைதான 14 பேர்களில் 12 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்தும், மற்ற இருவருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.