ஒடிசாவில் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
போக்குவரத்துத் துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து நடத்திய சோதனையில், கைது செய்யப்பட்ட 138 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு மாநிலம் முழுவதும் 2,600 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில், 251 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டது. கட்டாக்கில் 59 பேரும், சுபர்னாபூர் மாவட்டத்தில் 17 பேரும் என மொத்தம் 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இருப்பினும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மாநிலத்தில் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. கடந்த 2020-ம் ஆண்டில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதால் 648 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 298 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், முதல்முறை தவறு செய்பவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது முறையாக, 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் மதுபோதையில் சிக்கினால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 15,000 அபராதம் விதிக்கப்படும்.
தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, கரோனாவுக்கு பிறகு, ஆல்கஹால் பரிசோதனை செய்வதை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். தற்போது கரோனா எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக சிறப்பு இயக்கத்தை நடத்தத் தொடங்கியுள்ளனர், என்று அவர் கூறினார்.