நாடு ஹிந்து ராஷ்டிரமாக ஹிந்து தம்பதிகள் 4 குழந்தைகளைப் பெற்று 2 குழந்தைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஹிந்துத்வ தலைவர் சாத்வி ரிதம்பரா தெரிவித்துள்ளார்.
தில்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற வன்முறையைக் குறிப்பிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராம் மகோத்சவ நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
"அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள், நாடு அடையும் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்பவர்கள். அரசியல் பயங்கரவாதம் மூலம் ஹிந்து சமூகத்தைப் பிரிக்க நினைப்பவர்கள் தூள் தூளாக்கப்படுவார்கள். 2 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற கொள்கையை ஹிந்து பெண்கள் பின்பற்றுகின்றனர்.
ஆனால், அனைத்து ஹிந்து தம்பதிகளும் 4 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதில் இரண்டு குழந்தைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும். மீதமுள்ள இரண்டு குழந்தைகளை குடும்பத்திற்காக வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியா விரைவில் ஹிந்து ராஷ்டிரமாகிவிடும்.
இதையும் படிக்க | ஜிஎஸ்டி வரியில் ஏற்றமா?: நிர்மலா சீதாராமன் விளக்கம்
நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள்தொகையில் சமநிலையற்றத் தன்மை இருக்காது" என்றார் அவர்.
இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் திங்கள்கிழமை பேசுகையில், "நாட்டு மக்கள்தொகையில் சமநிலையற்றத் தன்மை இருந்தால் நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்காது" என்றார்.
பெற்றோர்கள் குழந்தைகளை ஆர்எஸ்எஸ்-க்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா எனக் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "ஆம், ஆர்எஸ்எஸ்-க்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்களை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பாளர்களாக்கி நாட்டுக்கும் அர்ப்பணிக்க வேண்டும்" என்றார்.
ரிதம்பரா ராமர் கோயில் இயக்கத்தில் உள்ளார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவான துர்கா வாஹினியின் நிறுவனர் இவர்.