கடப்பா: மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த மென்பொருள் பொறியாளர் 80 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் பி கொடுரு மண்டல் பகுதியல், 23 வயதாகும் மென்பொருள் பொறியாளர், தனது அறையில் அமர்ந்து திங்கள்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மடிக்கணினி வெடித்துச் சிதறியதில், அறை முழுவதும் தீப்பரவியது.
பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமலதா, நாள்தோறும் காலை 8 மணிக்கு வீட்டிலிருந்தே பணியாற்றத் தொடங்குவார். மடியில் மடிக்கணினியை வைத்துக் கொண்டு நேற்று பணியாற்றிக் கொண்டிருந்த போது அது வெடித்துச் சிதறியது.
அவரது அறையிலிருந்து புகை வருவதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக அங்கு விரைந்தனர். அப்போது சுமலதா, கருகிய நிலையில் படுக்கையில் மயக்கமடைந்து கிடந்தார். உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு சுமலதாவை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து அவர் திருப்பதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மடிக்கணினியின் பேட்டரிகள் அதிகம் சூடாவதால், இதுபோன்ற வெடிக்கும் அபாயம் இருப்பதாக, இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.