நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படும் அபாயம்: ராகுல் காந்தி கண்டனம்

8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி


புதுதில்லி: 8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரயில்வே துறைக்கும் இடையேயான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், மாநிலங்களில் நிலக்கரி இருப்பு மற்றும் தேவை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு, மின் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என்று ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

பணவீக்கம் அதிகரித்து வருகிறது. மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள் நசுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, இது மேலும் வேலை இழப்புக்கு வழிவகுக்கும்.

எனவே, பிரதமர் மோடி அவர்களே, வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு, மின் உற்பத்தி நிலையங்களை திறக்க வேண்டும்! என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com