பாஜக தலைமை அலுவலகத்தின் மீது புல்டோசரை ஏற்றினால் நாட்டில் நடக்கும் கலவரங்கள் தீரும் என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சாதா கருத்து தெரிவித்துள்ளார்.
தில்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை நடந்த ஜஹாங்கீர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சாதா, ''பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் கலவரங்களையும், குண்டர் சட்டத்தையும் நடத்தி வருகிறது. இதனை நீங்கள் நிறுத்த வேண்டுமென்றால், பாஜக தலைமையகத்தின் மீது புல்டோசரை ஏற்ற வேண்டும். பாஜக தலைமையகத்தின் மீது புல்டோசரை ஏற்றினால் கலவரங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன். என்ன மாதிரியான சூழல் தில்லியில் உருவாகியுள்ளது?'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், பாஜக தலைமை அலுவலகத்தின் மீது புல்டோசரை ஏற்ற வேண்டும் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.