தேசிய தலைநகர் தில்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ஜூட்டு சவுத்ரி (47) மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தில்லியின் மயூர் விஹார் பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த ஜூட்டு சவுத்ரி (47) புதன்கிழமை மாலை மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தில்லியின் துணை காவல் ஆணையர் பிரியங்கா காஷ்யப் கூறுகையில், உள்ளூர் பாஜக தலைவர் ஜூட் சவுத்ரி புதன்கிழமை மாலை 8.15 மணியளவில் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில வெற்று தோட்டாக்கள் மற்றும் பிற முக்கிய ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.