இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத்திற்கு வந்து இறங்கிய தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததாக பிரதமர் மோடிக்கு இன்று நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சிறப்பான வரவேற்பு அளித்த பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள எனக்காக அனைத்து இடங்களிலும் வரவேற்பு பலகை வைத்திருப்பதை பார்க்கும் போது சச்சின், அமிதாப் பச்சன் போல உணர்கிறேன்" என்றார்.
நேற்று குஜராத்திற்கு வந்த போரிஸ் ஜான்சனுக்கு நடன கலைஞர்கள் சிறப்பான வரவேற்பு அளித்த நிலையில், விமான நிலையத்திலிருந்து வழி நெடுகிலும் வரவேற்பு பலகை வைத்திருந்தனர்.
பின்னர், வெள்ளிக்கிழமையன்று, பாதுகாப்பு, தூதரகம், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் கலந்துரையாடினர். இருநாட்டு உறவை மேம்படுத்தி இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லும் வகையில் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிக்க | அரசு மரியாதையுடன் பிரிட்டன் பிரதமரை வரவேற்ற பிரதமர் மோடி...
இதனிடையே பேசிய போரிஸ் ஜான்சன், "அவர்கள் (குஜராத் மக்கள்) எங்களுக்கு அருமையான வரவேற்பு அளித்தனர். இது முற்றிலும் அசாதாரணமானது. இவ்வளவு மகிழ்ச்சியான வரவேற்பை நான் பார்த்ததில்லை. உலகில் வேறு எங்கும் இதே வரவேற்பு கிடைத்திருக்காது. உங்கள் (பிரதமர் மோடியின்) சொந்த மாநிலத்தை முதன்முறையாகப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது" என்றார்.
பின்னர், ராஜ் காட்டில் காந்தி நினைவிடத்தில் போரிஸ் மரியாதை செலுத்தினார்.