புவி நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம், முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இன்று புவி நாளை முன்னிட்டு காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு காட்சிப்படத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.
அதில் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலைப்பகுதி, கிரீன்லாந்தின் செர்மர்சூக் (Sermersooq) பனிப்பாறை, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறை, ஜெர்மனியின் ஹார்ஸ் காடுகள் ஆகியவை கடந்த 20-30 ஆண்டுகளில் எவ்வாறு இருந்தது என்பன போன்ற புகைப்படங்கள் அடங்கிய காட்சிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் விளைவால் மேற்குறிப்பிட்ட இடங்கள் எந்த அளவுக்கு மாற்றம் அடைந்துள்ளன என்பதை இந்த காட்சிப் படம் விளக்குகிறது.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூகுள் வலியுறுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாள் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.