பாராபங்கி: உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி சிறைச்சாலையில், 15 இந்து கைதிகள் உள்பட சுமார் 250 சிறைக் கைதிகள் ரமலான் நோன்பிருக்கிறார்கள்.
தங்களுடன் சிறையிலிருக்கும் முஸ்லிம் தோழர்களுடன், 15 இந்து கைதிகளும் செஹ்ரிக்காக அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார்கள். நாள் முழுக்க நோன்பிருந்து, மாலையில் நோன்பை முடிக்கிறார்கள்.
இதையும் படிக்க.. மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்
இந்த ஆண்டு சிறைச் சாலையில் இருக்கும் 250 கைதிகள் ரமலான் நோன்பிருக்கிறார்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரமலான் நோன்பிருக்கும் சிறைக் கைதிகளுக்கு செஹ்ரி மற்றும் இஃப்தாருக்காக பேரீட்சம்பழம் பால், தேநீர் போன்றவற்றை சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்து வைத்துள்ளது. இங்கு இந்து - முஸ்லிம் கைதிகள் ஒன்றாக இணைந்து ரமலான் நோன்பிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும், நாள்தோறும் ஒரு முறை மட்டும் அவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஃப்தாருக்காக சில சிறப்பு உணவுகளும் தயாரித்துக் கொடுக்கப்படுகிறது. இது தொடர்ந்து நீடித்தால், இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு இந்த சிறைச்சாலை ஒரு முன்னுதாரணமாக திகழும் என்கிறார்கள் சிறைச்சாலை அதிகாரிகள்.