தென் மேற்கு தில்லியில் இளம் பெண் ஒருவர், அவரின் குழந்தையின் கண் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த அந்த அடையாளம் தெரியாத நபர் தப்பித்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சாகர் பூர் காவல் நிலையத்தில் மதியம் 2:00 மணியளவில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனே அந்த இடத்திற்கு சென்றோம். அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குழந்தையை சுமந்தபடி வீடு திரும்பும் தாயை அந்த நபர் துரத்துவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மதியம் 2:10 மணியளவில் குற்றவாளி அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை அடையாளம் கண்டு அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிக்க | அரசு மரியாதையுடன் பிரிட்டன் பிரதமரை வரவேற்ற பிரதமர் மோடி...
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவரும் அந்த பெண்ணும் முன்னதாக அண்டை வீடுகளில் வாழ்ந்துவந்தது தெரியவந்தது. தற்போது, அந்த பெண் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால், கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.