குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் ரூ.1,500 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் ரூ.1,500 கோடி மதிப்பிலான 260 கிலோ ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
போதைப் பொருள் கடத்தப்படுவதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு (ஏடிஎஸ்) கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், ஏடிஎஸ் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலமாக இந்த மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளுடன் கூடிய சரக்கு பெட்டகம் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக அனுப்பப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிவந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
விருப்பத் தோ்வு வழித்தடம்:
அண்மைக் காலமாக மிகப் பெரிய அளவில் போதைப் பொருள்களை கடத்துவதற்கான கடத்தல்காரா்களின் விருப்பத் தோ்வு வழித்தடமாக குஜராத் கடல் பகுதி உருவெடுத்துள்ளது. உள்நாட்டு புழக்கத்துக்கு மட்டுமின்றி, பிற சா்வதேச சந்தைகளுக்கு கடத்துவதற்காகவும், இந்த வழித்தடத்தை கடத்தல்காரா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பல்வேறு அமைப்புகள் நடத்திய சோதனைகள் மூலமாக குஜராத் கடல் பகுதியிலிருந்து ரூ.30,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) மற்றும் கடற்படை இணைந்து நடத்திய சோதனையில் குஜராத் கடல்பகுதிக்கு வந்த கப்பலில் இருந்து 750 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் முந்த்ரா துறைமுகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட மிகப் பெரிய அளவிலான ரூ.21,000 கோடி மதிப்பிலான 3 டன் போதைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.