நிதி ஆயோக் துணை தலைவராக பதவி விகித்த ராஜீவ் குமார் திடீரென ராஜிநாமா செய்ததையடுத்து, சுமன் கே. பேரியை துணை தலைவராக மத்திய அரசு இன்று நியமித்துள்ளது. வரும் மே 1ஆம் தேதி, பேரி பொறுப்பேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் குமாரின் பதவிக்காலம் ஏப்ரல் 30ஆம் தேதியோடு முடிவடைகிறது. முன்னதாக, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான ராஜீவ் குமார், நிதி ஆயோக் துணை தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பதவி ஏற்று கொண்டார்.
அப்போது, நிதி ஆயோக் துணை தலைவராக பதவி விகித்த வி.சி. அரவிந்த் பனகாரியா, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணிக்கு திரும்பியதையடுத்து, ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார்.
இதற்கு மத்தியில், ராஜீவ் குமாரின் ராஜிநாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் அவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக்கின் கொள்கை முடிவுகளில் ராஜீவ் குமார் மிக முக்கிய பங்கை ஆற்றினார். குறிப்பாக, விவசாயம், சொத்துகளை விற்று பணமாக்குதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சி திட்டங்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் அவர் அதிக கவனம் செலுத்தினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் லக்னென பல்கலைக்கழகத்திலும் அவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கொள்கை ஆராய்ச்சி மையத்தியில் மூத்த ஆய்வாளராகவும் உள்ளார்.
பேரியை பொறுத்தவரை பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலின் இயக்குநராக அவர் பணியாற்றியுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு, புள்ளியியல் ஆணையம், ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.