தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் செல்வது குறித்து பஞ்சாப் முதல்வரை, சிரோமணி அகாலி தளத் தலைவர் தல்ஜித் எஸ்.சீமா கிண்டல் அடித்துள்ளார்.
பள்ளி பயணம் மேற்கொள்வது அரசியல் நாடகம் என்று முன்னாள் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். இந்த போலி நாடகம் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு உதவியாக இருக்குமே, தவிர பஞ்சாபிற்கு பெரிய உதவியாக இருக்காது என்றார்.
பஞ்சாப் கல்வி முறையில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வதற்கு முதலில் தனது சொந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லுமாறு பஞ்சாப் முதல்வருக்கு சீமா அறிவுறுத்தினார்.
தில்லி கல்வி மாதிரியைத் தெரிந்துகொள்ள ஒரு சுற்றுப்பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன், பகவந்த் மான் தனது சொந்த பள்ளிகளுக்குச் சென்று பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சீமா டிவீட் செய்துள்ளார்.
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுடன் பகவந்த் மான் திங்கள்கிழமை தேசிய தலைநகரில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.