மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, நிலக்கரி இறக்குமதிக்கான வரியை பூஜ்யமாக குறைக்க வேண்டும் என அசோசெம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கோடைகாலத்தையொட்டி பல மாநிலங்களில் எதிா்பாராத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளதையடுத்து இந்த நிலை உருவாகியுள்ளது.
எனவே, மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கான வரியை பூஜ்யமாக குறைக்க வேண்டும். தற்போது இறக்குமதியாகும் நிலக்கரி மீது 2.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய கடினமான சூழலை கருத்தில் கொண்டு இது முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.
மேலும், நிலக்கரி விநியோகத்தை துரிதப்படுத்தும் வகையில் ரயில்களில் அதிக ரேக்குகளை உருவாக்க வேண்டும்.
ஒட்டுமொத்த பொருளாதார மீட்சி இருந்தபோதிலும், தொழில்துறை உற்பத்தியின் வளா்ச்சி மந்தமாக இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கை மிகவும் அத்தியாவசியமானது என அசோசெம் தெரிவித்துள்ளது.