தில்லியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தில்லி தலைநகரில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது புதன்கிழமை 42 டிகிரி அளவைத் தாண்டி வியாழக்கிழக்கிழமை 44 டிகிரி செல்சியஸாக உயரும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தில்லியின் எப்போதும் இல்லாத அளவில் தற்போது வெப்பம் அதிகளவில் பதிவாகியுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 46 டிகிரி செல்சியஸாக பதிவாக வாய்ப்புள்ளது.
கடந்த 2017, ஏப்ரல் 21ல் தலைநகரில் அதிகபட்சமாக 43.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. மேலும், கடந்த ஏப்ரல் 29, 1941-ல் 45.6 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையாகப் பதிவானது.
வடமேற்கு இந்தியாவில் கடந்த வாரம் மார்ச் மாதத்திலிருந்து சாதாரண வெப்பநிலையை விட அதிகமாகப் பதிவாகி வருகிறது.
ஏப்ரல் 28 முதல் தேசிய தலைநகரில் வெப்ப அலை வீசும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், குழந்தைகள், முதியவர்கள், நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தேவையின்றி வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும்.
நீர் பாணங்கள் அருந்துதல், இலகுரக தளர்வான, பருத்தி ஆடைகள் அணிதல், குடை அல்லது தலைக்கு தொப்பி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை இந்தியா பதிவு செய்துள்ளது. நாட்டின் சில பகுதிகளிலும் பருவமில்லாத வெப்பம் காரணமாக கோதுமை விளைச்சல் 35 சதவீதம் வரை குறைந்துள்ளது.