காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளியை பாஜக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா காப்பாற்றிவருவதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்வுக்கு சற்று நேரம் முன்பு வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கர்நாடக தேர்வு வாரியத் தலைவர் எஸ்.ரம்யா, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் பெங்களூரு காவல் துறை கூடுதல் இயக்குநர் பணிமாற்றம் செய்யப்பட்டதுடன், 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தேர்வு முறைகேடில் ஈடுபட்டவர்களை பாஜக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா காப்பாற்றி வருவதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், காவல் உதவிஆய்வாளர் தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் திவ்யா ஹகராஜி. அவரை ஞானேந்திரா காப்பாற்றி வருகிறார். தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு சார்பில் ஞானேந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்று கூறினார்.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக அனைத்து வகையிலும் விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.