உத்தரப் பிரதேச அரசின் உத்தரவை அடுத்து மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் இதுவரை 11,000 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க, மத வழிபாட்டுத் தலங்களில் அதி ஒலி எழுப்பும் மற்றும் அனுமதி பெறாத ஒலிபெருக்கிகளை அகற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கி வைப்பதற்கு அனுமதி பெற வேண்டும், அவ்வாறு ஒலிபெருக்கியில் இருந்து வரும் ஒலி வளாகத்தைத் தாண்டி வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநில அரசால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மாநிலத்தில் முழுவதும் உள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இருந்து மொத்தம் 10,923 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, 35,221 ஒலிபெருக்கிகளின் ஒலி எழுப்பும் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
ஆக்ரா, மீரட், பரேலி, லக்னெள, கான்பூர், பிரயாக்ராஜ், கோரக்பூர், வாராணசி ஆகிய பகுதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநில உள்துறை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக முதல்வர் யோகி ஆதித்யநாத், மத வழிபாட்டுத் தலங்களில் சத்தமாக ஒலிபெருக்கிகளை இயக்கக்கூடாது என்றும் மாநில அரசு விதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.