நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்வெட்டை தவிர்க்கும் வகையில், நிலக்கரி ஏற்றி செல்லும் ரயிலை விரைவாக இயக்க பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின் ஆலைகளில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால் பல்வேறு மாநிலங்கள் பெரும் சிக்கலில் சிக்கி தவித்துவருகிறது.
கோடை காலம் என்பதால் நிலக்கரியின் தேவையும் அதிகரித்துள்ளது. நாட்டின் மின் தேவையில் 70 சதவிகிதம் நிலக்கரியின் மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது.
பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், புதைபடிவ எரிபொருள்களின் பற்றாக்குறை பல தொழிற்சாலைகளின் உற்பத்தியை குறைத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகள் பல மணி நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீ்து ரஷ்யா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் விளைவாக எரிபொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க முடியாமல் இந்திய அரசு தவித்து வரும் நிலையில், பண வீக்கமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்தியன் ரயில்வேயின் நிர்வாக இயக்குநர் கெளரவ் கிருஷ்ணா பன்சால், "இந்த நடவடிக்கை தற்காலிகமானது.
இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும். மின் ஆலைகளுக்கு நிலக்கரி எடுத்து செல்லும் நேரத்தை குறைத்த ரயில்வே முயற்சி செய்துவருகிறது" என்றார்.
நீண்ட தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு நிலக்கரியை எடுத்து சென்று விநியோகிப்பதற்கு போதுமான ரயில்வே பெட்டி இல்லாமல் இருப்பதால்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுவதாக இந்தியன் ரயில்வே விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது.
இதையும் படிக்க | நிலக்கரி வருகை: தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி...
ரயில்வே போக்குவரத்து நெரிசல் மிகந்த பாதைகளால், அதாவது பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இரண்டும் அதிகம் இயக்கப்படும் பாதைகளால், நிலக்கரி ஏற்றுமதி தாமதமாகிறது.
இருப்பினும், நிலக்கரி ஏற்றி செல்வதற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக, மின் ஆலைகளில் வெகுதூரத்தில் உள்ள பயனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இந்த பிரச்னையை சரி செய்ய, மேலும் 1,00,000 ரயில்வே பெட்டிகளை பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுவருகிறது. சரக்குகளை விரைவாக எடுத்து செல்ல பிரத்யேக சரக்கு ரயில் பாதையை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து மின் ஆலைகளில் உள்ள நிலக்கரியின் இருப்பு 17 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.