புதுதில்லி: நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அரசுகள் நடைமுறைப்படுத்துவதில்லை என்று இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா சனிக்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.
11 ஆவது கூட்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 10 லட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் இது மிகவும் குறைவானது என்று அவர் கூறினார்.
இன்றைய நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட 1,104 உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளில், 388 காலியிடங்கள் இருப்பதாகவும், 180 பரிந்துரைகளில், 126 உயர் நீதிமன்றங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல ஆண்டுகளாக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்ததால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள், புதிய வகைச் சுமையாக இருப்பதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா சுட்டிக்காட்டினார்.
நீதித்துறை தீர்ப்புகளாக இருந்தபோதிலும், அரசாங்கங்கள் வேண்டுமென்றே செயல்படாமல் இருப்பது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் கூறினார்.