புது தில்லி: நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறையும் அதன் காரணமாக உருவாகியிருக்கும் மின்வெட்டு பிரச்னையும் அதற்காக பயணிகள் ரயில்களை ரத்து செய்துவிட்டு சரக்கு ரயில்களை இயக்கும் முடிவு சரியான தீர்வு என்று காட்டமாகக் கூறியிருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம்.
அத்துடன், மத்திய நிலக்கரி, ரயில்வே மற்றும் மின்துறை அமைச்சர்கள், தங்களது 'வெகுச் சிறப்பான திறமையின்மையை' மறைக்க சாக்குபோக்குகளை தீவிரமாகத் தேடி வருகிறார்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோடை வெப்பம் அதிகரித்திருப்பதால், மின்தேவை கடுமையாக அதிகரித்திருப்பதால், ஆனால் அதற்கு தேவையான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு இல்லாமல் பல மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. பல அனல்மின் நிலையங்களில் போதுமான நிலக்கரி கையிருப்பில் இல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.
இது குறித்து ப. சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அபரிமிதமான நிலக்கரி, மிகப்பெரிய ரயில் பாதைகள், அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படாத அளவுக்கு திறன் இருந்தும் நாட்டில் கடுமையான மின்வெட்டுப் பிரச்னை நிலவுகிறது. ஆனால் அதற்காக மோடி அரசை குற்றம்சாட்ட முடியாது. இதற்குக் காரணம் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுதான்.
தற்போது மத்திய நிலக்கரி, ரயில்வே மற்றும் மின்துறை அமைச்சகர்களாக இருப்போரின் திறமையின்மை இதற்குக் காரணமில்லை. எனவே, அந்தந்தத் துறைகள் சார்பில் முந்தைய காங்கிரஸ் அரசு மீது பொய்மூட்டைகளை சுமத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய அரசு மிகச் சரியான தீர்வை கண்டறிந்துள்ளது. அதுதான் பயணிகள் ரயில்களை ரத்து செய்துவிட்டு சரக்கு ரயில்களை இயக்குவது என்று காட்டமாகக் கூறியுள்ளார்.