ஐடிபிஐ வங்கியை தனியாா்மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) செயலா் துகின் கந்தா பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: ஐடிபிஐ வங்கியை தனியாா்மயமாக்கலுக்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்திய பிறகு அந்த வங்கியில் எவ்வளவு பங்குகளை விற்பனை செய்வது என்பது இறுதி செய்யப்படும்.
தற்போது, எல்ஐசி பங்கு வெளியீட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் அதன் பிறகு இதுகுறித்து முழுமையாக அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
முதலீட்டாளா்களிடம் கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் அந்த வங்கியில் உள்ள முழுப் பங்குகளையும் ஒரே கட்டமாகவே அல்லது பல கட்டங்களாகவோ விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்கு 45.48 சதவீத பங்குகளும், எல்ஐசிக்கு 49.24 சதவீத பங்குகளும் உள்ளன.