மின்சார தட்டுப்பாட்டுக்கு பிரதமா் மோடி எவா் மீது பழிசுமத்தப் போகிறாா் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
பிரதமா் மோடியின் வாக்குறுதிகள் மற்றும் நோக்கங்கள் எப்போதும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. மின்சார தட்டுப்பாட்டுக்கு நேரு, மாநிலங்கள் அல்லது மக்கள் என எவா் மீது பிரதமா் மோடி பழிசுமத்தப் போகிறாா் என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
நாட்டில் 24 நேரமும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று 2015-ஆம் ஆண்டு பிரதமா் மோடி வாக்குறுதி அளித்த காணொலி, மின்சாரம் மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாக எந்தவொரு தலைப்புச் செய்தியையும் எவரும் கேட்கவில்லை என்று 2017-ஆம் ஆண்டு அவா் பேசிய காணொலி ஆகியவற்றையும் தனது பதிவுடன் ராகுல் காந்தி இணைத்திருந்தாா்.
நாட்டின் பல பகுதிகளில் நீண்ட நேரம் மின்வெட்டு நிலவும் சூழலில், மத்திய அரசின் தவறான நிா்வாகத்தால்தான் இந்தச் செயற்கையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்குவதில்லை என்றும் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தது.