கொழும்பு: வீடு இல்லாத ஒருவரை, வீட்டுக்குப் போ என்று கூறி போராட்டம் நடத்துவது அர்த்தமற்றது என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தனக்கெதிராக போராட்டம் நடத்துவோருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
வீட்டுக்குப் போ என்று கூறி, ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவோரால், அதிபருக்கு ஆபத்து என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் இந்த பதிலை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க | வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றான கண்டியில் பொதுமக்களிடையே பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தயவு செய்து உங்களை வேண்டி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், அவ்வாறு முழக்கமிடாதீர்கள். ஏனென்றால் எனக்குத்தான் வீடில்லையே என்று அவர் கூறினார்.
மேலும், என்னை வீட்டுக்குப் போ என்று கூறி போராட்டம் நடத்துவதால் நேரம் தான் வீணாகிறது. அதற்குப் பதிலாக போராட்டக்காரர்கள் எரிக்கப்பட்ட எனது வீட்டை சரி செய்து கொடுக்கலாம் என்கிறார்.
ஒரு மனிதனுக்கு வீடில்லாத போது, அவனை வீட்டுக்குப் போ என்று கூறுவதில் அர்த்தமில்லை. போராட்டக்காரர்கள் ஒன்று இந்த நாட்டை மீண்டும் கட்டமைக்க வாருங்கள் அல்லது எனது வீட்டை கட்டமைத்துத் தாருங்கள் என்றும் கூறியுள்ளார்.