குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் அனைவரும் வேலை வழங்கப்படும் எனவும், வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் எனவும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தில்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, தற்போது குஜராத் மாநிலத்திலும் வெற்றி பெற கவனம் செலுத்தி வருகின்றது.
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று சோம்நாத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அரவிந்த் கேஜரிவால் பேசுகையில்,
குஜராத்தில் அனைத்து மக்களுக்கும் வேலை வழங்க உத்தரவாதம் அளிக்கின்றேன். மாநிலத்தில் வேலை இல்லாத அனைவருக்கும் வேலை வழங்கப்படும். வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும். 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.