காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவின் பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாடப்படுவதால், அவரது ஆதரவாளர்களுக்கும் மாநில தலைவர் சிவக்குமார் ஆதரவாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் மிகப்பெரிய மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வழியெங்கும் வரவேற்பு பதாகைகளும், மாநாடு நடைபெறும் இடத்தில் உயரமான பதாகைகளும் வைக்கப்பட்டன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சித்தராமையா ஆதரவாளர்களின் இந்த செயல் காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம், சித்தராமையா தவிர்க்க முடியாத தலைவர் என்பதை நிரூபிக்க அவரின் ஆதரவாளர்கள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பதவிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இது உள்ளதாக சிவக்குமார் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிவக்குமாருக்கு உயர் பதவி அளிக்க வேண்டும் என அவரது தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். ராகுல் காந்திக்கு சிவக்குமார் நெருக்கமானவர் என்பதால், சித்தராமையா பிறந்தநாள் விழாவுக்கு ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் இருக்க ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை விடுதியில் தங்கவைத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் சிவக்குமார். எனினும் சில எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிற்கு தாவியதால், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி கவிழ்ந்தது.