பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது.
தென்-மேற்கு மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகின்றது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
கனமழை, வெள்ளத்தில் சிக்கி 98 பெண்கள், 191 குழந்தைகள் உள்பட 502 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
கனமழையால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 2,500 கி.மீ சாலைகள் சேதமாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தொலைதூர கிராமங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
இதையும் படிக்கலாம்: கருணாநிதி நினைவு பேனா சிலைக்கு கடலால் என்ன சிக்கல்?
பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் அதிக மழைப்பொழிவு இந்தாண்டு பதிவாகியுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் குழந்தைகள் உள்பட 10 லட்சம் மக்கள் தண்ணீரால் பரவும் நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சமீப வருடங்களாகக் காற்றின் தரம் குறைந்துள்ளதால் திடீர் வெள்ளம், வெப்ப அலைகள், மேக வெடிப்புகள், வறட்சி மற்றும் புகை மூட்டம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.