ஆயுதங்கள் வழங்கிய குற்றத்திற்காக 24 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தென்கிழக்கு தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆயுதங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
துருவ் அலியாஸ் என்பவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். அவர் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 2) அன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்த ஆயுதங்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்கையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் பேரில் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்தனர்.
இது குறித்து துணைக் காவல் ஆணையர் ஜஸ்மீத் சிங் கூறியதாவது: “ 12 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் கடந்த 3 ஆண்டுகளாக தில்லி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆயுதங்களை எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதன் பின், தனக்கென ஒரு அமைப்பை தில்லியில் உருவாக்கி அதன் மூலம் ஆயுதங்களை கைமாற்றி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் 400க்கும் அதிகமான ஆயதங்களை தலைநகர் தில்லியில் கைமாற்றியுள்ளார். துருவ் இதற்கு முன்னதாக சில வழக்குகளில் உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு துருவ் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து சமையல் எண்ணெய் ஏற்றி வந்த வாகனத்தை துப்பாக்கி முனையில் மிரட்டி அதிலிருந்து கொள்ளையடித்தனர்.” என்றார்.