கர்நாடகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு குறிப்பாக தெற்கு உள் பகுதியில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவிலும் அடுத்த 2 நாள்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ரங்கநதிட்டு பறவைகள் சரணாலயம், ராம்சர் நீர்நிலை பகுதியிலும் இடைவிடாத மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், ஸ்ரீரங்கப்பட்டணா நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
உலகப் புகழ்பெற்ற ரங்கநதிட்டு பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிகாரிகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கஞ்சம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற நிமிஷாம்பா கோயில் வாசல் வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
புதன்கிழமை வரை, பெங்களூருவில் 63.3 மிமீ மழைப் பதிவாகியுள்ளது, இது கடந்த 5 ஆண்டுகளில் ஆகஸ்டு மாதத்தில் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.