பிகாரில் இதுவரை நடக்காதது இனி நடக்கும் என அம்மாநில துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை ஜக்கிய ஜனதா தளம் கட்சி முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்தார்.
தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிதீஷ் குமார் ஆட்சியமைத்துள்ளார். புதன்கிழமை பிகார் முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்று கொண்டனர்.
இந்நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “எங்களது கூட்டணி வலிமையாகவே உள்ளது. காலத்திற்கு தேவையான கடினமான முடிவை நிதீஷ் குமார் எடுத்துள்ளார். பாஜகவினரால் வகுப்புவாத நடவடிக்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன. மாநிலக் கட்சிகளை பாஜக அழிக்கப் பார்க்கிறது. நாட்டிற்கு என்ன தேவையோ பிகார் அதனை செய்யும்.
நாங்கள் அதற்கான பாதையைக் காட்டுவோம். வேலையின்மைக்கு எதிரானதே எங்களது போராட்டம். ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மீது நிதீஷ் குமாருக்கு கவலை உள்ளது. ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு மெகா வேலைவாய்ப்பை ஒரு மாத காலத்திற்குள் ஏற்படுத்துவோம். இதற்கு முன் நடக்காததுபோல் அது பிரமாண்டமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.