மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வேண்டும் என மக்களவையில் தென்சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் விதி எண் 377-இன் கீழ் வலியுறுத்தினார்.
2022- 2023 கல்வியாண்டுக்கு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் பல்வேறு படிப்புகளுக்கு, தேசிய தேர்வு முகமை நடத்தும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் (க்யூட்) மூலமே மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது துரதிருஷ்டவசமானது.
"நீட்' உள்ளிட்ட இதுபோன்ற தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை புறம் தள்ளுகிறது. நுழைவுத் தேர்வில் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கு மாணவர்கள் பயிற்சி மையங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும் மற்ற பாடத் திட்டங்களில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதகத்தையே ஏற்படுத்துகிறது. அனைத்து மாணவர்களுக்கும் அது சமமான வாய்ப்பை வழங்காது. பெரும்பாலான மாநிலங்களில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களாகவே உள்ளனர். எனவே, அனைத்துப் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கான மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் கேட்டுக் கொண்டார்.