மக்களுக்கு வழங்கப்படும் இலவச வசதிகளை எதிர்க்கும் மத்திய அரசின் நிதியில் ஏதோ தவறு இருக்கிறது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: “ அக்னிபத் திட்டத்தினைக் காரணமாகக் கூறி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதிப் பங்கீடானது 42 சதவிகித்தில் இருந்து 29 சதவிகிதமாக குறைத்துள்ளது, உணவுப் பொருள்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியினை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் நிதியில் 25 சதவிகிதம் குறைத்துள்ளது ஆகிய செயல்களில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இவ்வளவு பணமும் எங்கே செல்கிறது. மத்திய அரசு அதிக அளவில் வரி வசூல் செய்கிறது. ஆண்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வரியாக ரூ.3.5 லட்சம் வசூலிக்கிறது. இத்தனைக்கும் பிறகும் நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் கல்வி மற்றும் உடல் நல ஆரோக்கியம் சார்ந்த சேவைகளை கடுமையாக எதிர்க்க காரணம் என்ன?. ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு நிதி குறைவாக இருப்பதாக மத்திய அரசு காரணம் கூறுகிறது. மத்திய அரசின் நிதியில் ஏதோ தவறு இருக்கிறது.” என்றார்.
மத்திய அரசு 10 லட்சம் கோடி கடன்களை மிகப் பெரிய பணக்காரர்களுக்கும் அவர்களது நிறுவனங்களுக்கும் தள்ளுபடி செய்ததையும் அரவிந்த் கேஜரிவால் சுட்டிக் காட்டினார்.