இளைஞர்கள் அவர்களது உரிமையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அதே வேளையில் அவர்களது கடமையிலும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் நலத் துறை சார்பில் நடத்தப்பட்ட யுவா சம்வத்: இந்தியா 2047 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: “ இளைஞர்கள் சவால்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அந்த சவால்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அவர்களுக்கென புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் நிறைய எதிர்பார்க்கின்றன. இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள் இனி அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் கடமையாற்றினால் போதாது. அவர்கள் நாட்டிற்காகவும் மற்ற நாடுகளில் இருக்கும் குறைந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கபெற்ற மக்களுக்காகவும் அவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இதையும் படிக்க: 2023 மார்ச் மாதத்தில் மகளிர் ஐபிஎல்?
உலக நாடுகள் இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. நான் இளைஞர்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உங்களது உரிமையில் விழிப்புணர்வுடன் இருங்கள். ஆனால், அதே சமயத்தில் உங்களது கடமைகள் மற்றும் பொறுப்புகளில் கவனமாக இருங்கள். உலகில் நிலவும் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இளைஞர்கள் பொறுப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.” என்றார்.