ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு, சனிக்கிழமை, அரசுப் பணியில் இருந்து வந்த ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்புத் தலைவர் மகன் உள்பட நான்கு பேரை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் 311வது பிரிவின்படி, எந்த விசாரணையும் இன்றி, அரசுப் பணியாளர்களை, பணியிலிருந்து நீக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி, இந்த நான்கு பேரும் அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஃபரூக் அகமது தாஸ் என்கிற பிட்டா கராட்டே, பயங்கரவாத அமைப்புக்கு பணம் திரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
இதையும் படிக்க.. எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!
இந்த நிலையில், அவரது மனைவி அஸ்ஸாபா-உல்-அர்ஜமந்த் கான், ஜம்மு காஷ்மீரின் ஊரக மேம்பாட்டு இயக்ககத்தின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொழில் மற்றும் வணிகத் துறையின் தகவல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் மேலாளராகப் பணியாற்றி வந்த சையது அப்துல் முயீது (நாட்டில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன் மகன்) பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுடன் விஞ்ஞானி டாக்டர். முஹீத் அகமது பட், மஜித் ஹூசைன் கட்ரி (காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் மூத்த உதவிப் பேராசிரியர்) ஆகியோரும் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.