காஷ்மீரின் அமா்நாத் குகைக்கோயில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 3.65 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரிகா்கள் பனிலிங்கத்தைத் தரிசித்துள்ளனா்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற புனித யாத்திரையைக் கடந்த ஜூன் 30-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தொடக்கிவைத்தாா். 43 நாள்கள் நடைபெற்ற யாத்திரை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி, துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை நிறைவு பூஜை செய்தாா். யாத்திரை சுமுகமாக நடைபெற உதவிய ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம், பாதுகாப்பு படைகள், தன்னாா்வலா்கள், மத தலைவா்கள் மற்றும் தூய்மைப்பணியாா்கள் மேற்கொண்ட முயற்சிகளை மனோஜ் சின்ஹா பாராட்டினாா்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு சுமாா் 3 லட்சத்து 65 ஆயிரம் யாத்ரிகா்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா். கடந்த ஜூலை 8-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 15 போ் உயிரிழந்தனா்.