ஜம்மு-காஷ்மீரில் கைவிடப்படு சென்ற டிபன் பாக்ஸை வெடிகுண்டு என நினைத்த மக்கள் பதறினர். பின்னர், அது வெடிகுண்டு இல்லை எனத் தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் பதர்வா பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சந்தைப் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 12) மாலை அரங்கேறியுள்ளது. சந்தையில் கேட்பாரற்று கிடந்த பையினைப் பார்த்து மக்கள் கலக்கம் அடைந்தனர். சந்தையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளப் பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு இந்தப் பை சாலையின் ஓரத்தில் கிடந்துள்ளது. அந்தப் பைக்காக யாரும் உரிமைகோராத நிலையில் காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கிருந்த மக்களை தூரமாக செல்லுமாறு அறிவுறுத்தினர். அதேபோல அந்த சந்தையில் இயங்கி வந்த கடைகள் அனைத்தையும் பூட்டும் படியும் கேட்டுக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டினை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர், அந்தப் பையினை பரிசோதித்தபோது உள்ளே வெடிகுண்டு எதுவும் இல்லை. மாறாக, பையினுள் டிபன் பாக்ஸ் மட்டுமே இருந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த மக்கள் நிம்மதியடைந்தனர்.
இதையும் படிக்க: பத்தாவது படித்து டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் பதார்வா கூறியதாவது: “ அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வெடிகுண்டினை செயலிழக்கச் செய்யும் குழுவினர் அந்தப் பையினை சோதனை செய்தனர். இந்த சோதனையின் இறுதியில் பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை. பையில் டிபன் பாக்ஸ் மட்டுமே இருந்தது.” என்றார்.